குழந்தையின் சடலத்துடன் தாயை அலைக்கழித்த சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவில் உயிரிழந்த தன் குழந்தையின் சடலத்துடன் தாயார் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்ட போது ,அவர் நோயாளர் காவு வண்டியில் சடலத்துடன் நீண்ட நேரம் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தி தொடர்பில் தான் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டதாக , நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்து , கண்டன அறிக்கை ஒன்றினையும் தனது உத்தியோகபூர்வ சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
குழந்தையின் உடலத்தோடு நெடுந்தீவிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்த அந்த தாய் பட்ட வேதனையை என்னால் உணரமுடிகிறது. இந்த அலைச்சல்களுக்கு காரணமானவர்களை வன்மையாக கண்டிக்கின்றேன்.
தீவகத்துக்கான தேவைகள் தீரவில்லை
நோயாளர் காவு வண்டிகளுக்கான (அம்புலன்ஸ்) நடைமுறைகளை இத்தனை இறுக்கமாக கடைப்பிடிப்பது சரியா தவறா என்பதை தாண்டி அந்த நடைமுறைகளை கடந்து மனிதாபிமானத்தோடு செயற்பட்ட வேலணை வைத்தியசாலையினர் பாராட்டுக்குரியவர்கள்.
இத்தகைய சந்தர்ப்பங்கள் தீவகத்துக்கான தேவைகள் தீரவில்லை என்பதை உரத்துச் சொல்கின்றன. இறந்தவரது சடலத்தை ஏற்றுவதற்கு வாகனகாரர்கள் அதிகளவு பணம் கோருவார்கள்.
அமரர் ஊர்தி சேவைகள் செய்பவர்கள் மற்றைய வாகனங்களை விட ஒப்பிட்டு ரீதியில் குறைவாக பணம் அறவிட்டாலும், அவர்களின் தொகையும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகமே.
எனவே இலவச அமரர் ஊர்தி சேவை ஒன்று இயங்குமாயின், அதன் ஊடாக பலர் பயன்பெறுவார்கள். அத்தோடு தீவுகளுக்கிடையிலான மருத்துவ சேவையை வினைத்திறனாக வழங்கும் வகையில் வைத்தியசாலை வளங்கள், ஆளணிகள், படகுசேவைகள் உள்ளிட்டவையும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளன.
அரச இயந்திரத்தை தாண்டி தன்னார்வ அறக்கட்டளைகள் , நன்கொடையாளர்கள் இணைந்து இவ்விடயத்தில் செயலாற்ற வேண்டுமென எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.