மாலைதீவுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான முரண் நிலை அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் மாலேவில் நடைபெற்ற முதல்வர் (மேயர்) தேர்தலில் இந்திய ஆதரவு பெற்ற கட்சி வெற்றி பெற்றுள்ளவிடயம் பேசுபொருளாகியுள்ளது.
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மிக சிறிய நாடான மாலைதீவில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அதிபராக சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முகமது முய்சு பதவியேற்றார்.
அதன்பிறகு சீனாவுடன் அந்த நாடு நெருக்கம் காட்ட தொடங்கியது. இதற்கிடையே, அண்மையில் மாலைதீவு அமைச்சர்கள் சிலர் இந்திய பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மோடி குறித்து பேசிய மூன்று அமைச்சர்களையும் மாலைதீவு அரசு பதவி நீக்கம் செய்தது.
இந்த சலசலப்புகளுக்கு மத்தியில் மாலைதீவு தலைநகர் மாலே-வில் முதல்வர் (மேயர்) தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில், ஆளும் கட்சி படுதோல்வி அடைந்தது.
மாறாக இந்தியா ஆதரவு நிலைப்பாடு கொண்ட எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் ஆடம் அசிம் வெற்றி பெற்றுள்ளார்.