இலங்கையில் வெள்ளி விழா பூர்த்தி செய்த முதல் தமிழ் நீதிபதியான, மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நீதிபதியாக 27 ஆண்டுகளை பூர்த்தி செய்யவுள்ளார்.
வவுனியாவில், 05.02.1997 அன்று நீதிபதியாக நியமனம் பெற்ற அவர், தனது முதல் நியமனத்தை நீதவானாக ஆரம்பித்து நாளைய தினத்துடன் (06.02.2024) 27 ஆண்டுகளை பூர்த்தி செய்த முதல் தமிழ் நீதிபதி என்ற சிறப்பிற்குரியவராகிறார்.
தற்போதைய வடக்கு – கிழக்கு மாகாண அனைத்து நீதிபதிகளிலும் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்த முதல் பெருமைக்குரிய தமிழ் நீதிபதியாக மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உள்ளார்.
இலங்கையின் சில முக்கிய வழக்குகளான, 1999இல் யாழ். செம்மணி புதைகுழி வழக்கு, 1999இல் மன்னாரில் காமாலிக்கா கொலை வழக்கு, மடு தேவாலய குண்டு வெடிப்பு வழக்கு மற்றும் லயன் எயார் குண்டு வெடிப்பு வழக்கு போன்ற வழக்குகளுக்கு இவர் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அத்துடன், 2000 – 2008 வரையிலான ஒன்பது ஆண்டுகள் கடுமையான யுத்தம் நிலவிய காலப்பகுதியில் இவர் வவுனியாவில் நீதிபதியாக கடமையாற்றியுள்ளார்.
மேலும், 2009இல் திருகோணமலை கோயில் குருக்கள் மனைவி கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கியமை, 2015இல் கணவர் கொலை வழக்கில் மனைவிக்கு மரண தண்டனை விதித்தமை, 2018இல் யாழ். இளைஞன் கொலை வழக்கில் இரு இராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தமை போன்றவை இவரால் வழங்கப்பட்ட முக்கிய தீர்ப்புகளாகும்.