புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 12ஆவது சந்தேகநபர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியாழ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வித்தியா படுகொலை வழக்கு நேற்றைய தினம் நீதிபதி ஏ.எம்.எம் றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேகநபர்கள் 12 பேரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். இதில்குறித்த 12 பேரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நாள்தோறும் காலை 09.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன், நீதிமன்றுக்கு ஏதேனும் தெரிவிக்க விரும்புகின்றீர்களா என சந்தேகநபர்களிடம் நீதிபதி வினவினார். இதன் போது 12ஆவது சந்தேகநபர்,
“என்ன குற்றத்திற்காக கைது செய்யப்பட்டேன், என்ன குற்றம் செய்தேன், எந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன் என தனக்கு தெரியாது” என மன்றுக்கு தெரிவித்தார்.
இதன் போது பதில் வழங்கிய நீதிபதி, “இலங்கை சட்டத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றம் என்ன என்பது தொடர்பில் கேட்டு அறிந்திருக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இதனையடுத்து, 12ஆவது சந்தேகநபர் “குற்றம் என்னவென்று தெரியாத காரணத்தினாலேயே கேட்கின்றேன்” என மன்றில் உரத்த குரலில் தெரிவித்தார்.
இந்நிலையில், நீதிபதியின் கூற்றுக்கு மதிப்பளிக்கவில்லை என தெரிவித்து 12ஆவது சந்தேகநபர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.