பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்க முடியாத சுமந்திரன் அண்மையில் யாழிற்கு வருகை தந்த பிரதமரைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று சொந்தம் கொண்டாடியிருப்பது கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ். கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கூட்டமைப்பினர் பொய்களைக் கூறி எமது மக்களுக்குத் தேர்தல் காலங்களில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, அவர்களை நம்ப வைத்த காரணத்தால் இன்று அவர்கள் நடுத்தெருவில் நின்று நீதி கோரி போராடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வடக்கில் வேலையற்ற பட்டதாரிகள் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கிழக்கிலும் வேலையற்ற பட்டதாரிகள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
எமது மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து இராணுவம் அந்தக் காணிகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் காணிகளின் சொந்தக்காரர்கள் இடம்பெயர்ந்து தற்காலிக குடிசைகளிலும், நலன்புரி முகாம்களிலும் வாழ்ந்து வரும் நிலையில் அந்த மக்களும் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கு மேலாகப் போராடி வருகிறார்கள்.
அது மாத்திரமல்லாமல் தமிழ் பேசும் மக்களாகிய முஸ்லிம் மக்கள் இனவாதிகளால் தாக்குதலுக்குள்ளாகி வருகிறார்கள். இவ்வாறான சூழலில் தான் சுமந்திரன் இலங்கையின் அரச தலைவரான பிரதமரைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் எமது மக்கள் முகம் கொடுத்து வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு எவற்றையும் பெற்றுத் தரப் போவதில்லை என்று கூறித்தான் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தலைமையிலான கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு நிபந்தனையில்லாத ஆதரவை வழங்கினர்.
இவ்வாறான ஆதரவு மூலம் தமிழ் மக்கள் முகம் கொடுத்து வரும் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என அவர்கள் அப்போது தெரிவித்திருந்தனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 06ஆம் திகதி நல்லூர் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பகிரங்க விவாதமொன்றில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவர் எனவும், அதற்கான வாக்குறுதி தங்களுக்குக் கிடைத்திருப்பதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இன்றுவரை தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. எமது மக்களுக்கான பொறுப்புக் கூறலிலிருந்து கூட்டமைப்பினர் தப்பித்துவிட முடியாது என தெரிவித்தார்.
மேலும், கூட்டமைப்பினரின் ஏமாற்று வேலைகளுக்கு இனியும் எமது மக்கள் துணை போக மாட்டார்கள் என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.