தமிழர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே வட மாகாண சபையைக் குழப்ப முயற்சிகள் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகம் எழுவதாக வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபையில் இடம்பெறும் விடயங்களுக்கும் தெற்கு அரசியலுக்குமிடையிலான தொடர்பு குறித்து முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
வட மாகாண சபையையும் அதன் செயற்பாடுகளையும் திட்டமிட்ட வகையில் குழப்புவதன் மூலம் தமிழ் மக்களின் கவனத்தினைத் திசை திருப்புவதற்கு, அரசாங்கமும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் தமிழ் அரசியல்வாதிகளும் முனைந்து வருகின்றார்களோ என்று எண்ண வேண்டியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புத் திருத்தத்தினூடாக தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத்தர வேண்டிய அரசாங்கம் அதனைச் செய்யாது காலத்தினை இழுத்தடிப்பதாக சி.வி.விக்னேஷ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்தேச அரசியல் அமைப்பில் தமிழர் தரப்புக்கு அதிகாரங்களை முழுமையாகப் பகிர்ந்தளிக்காத விதத்தில் மாற்றங்களை உள்ளடக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டு வருவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அதிகாரம், வடக்கு கிழக்கு இணைப்பு, நிதி உட்பட பல்வேறு ஆக்கப்பூர்வமான அதிகாரப் பகிர்வினை தமிழர் தரப்பு எதிர்பார்த்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், அவற்றினை வழங்காது ஒரு அரைகுறைத் தீர்வினைத் திணிப்பதற்கு அரச தரப்பு முயன்று வருவதாக முதலமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சில தமிழ் தரப்பு அரசியல்வாதிகள் அரசின் இந்தப் போக்கிற்கு ஆதரவளித்து வருவதுடன் மக்களுக்கு இது தொடர்பிலான விடயங்களைத் தெளிவுபடுத்தாது மூடி மறைப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேல் எதனையும் தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது என்று சிலர் கூறி வருவது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவும் சி.வி விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.