தீபாவளிக்கும் நிறையக் கதைகள் உள்ளன. தீபாவளியை தீ ஒளி என முன்னோர் குறிப்பிடுகிறார்கள். தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் என்கின்றனர். ஒளி என்பது வெற்றியின் அடையாளம். இருள் என்பது தோல்வியின் பொருள்.
தீய்மையே வடிவான அரக்க குணம் கொண்ட அசுரர்களை கடவுளின் அவதாரம் அழித்ததால் உருவானதுதான் தீபாவளி என்கின்றன இந்துப் புராணங்கள். நாம் அனைவருக்கும் தெரியும் நராகாசுரன் கதை. நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன் நரகாசுரன்.
மகாவிஷ்ணுவின் அசுரவதத்தில் பிறந்தவன் என்பதால் அசுரசுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்துவிட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது.
வளர வளர இவனது அட்டுழியம் பெருத்தது.இவன் தேவர்களுக்கும் பொது மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். இதை அறிந்த எம்பெருமான் மகாவிஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமாதேவிக்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றவன்.இதனால் மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார்.நரகாசூரனுடன் போரிட்டார். அவன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான்.
நரகாசூரன் எய்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்திய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு நரகாசூரன் போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி சரிந்தான். அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது.
அப்போது,அவரிடம் அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி, ஒளிமயமாக கொண்டாட வேண்டும் என்று வேண்டினான்.மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள்.இதையொட்டி நரகாசூரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது.இத்திருநாளில் அதிகாலையில் நீராடி மகாலட்சுமி பூஜையை அனுஷ்டித்து தீபங்களை ஏற்றி வீடு நிறைய வைத்தால் லட்சுமி கடாட்சம் கைவர கிடைக்கும் என்கிறது விஷ்ணுபுராணம்.