காலி கிந்தொட்ட பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களை கண்டித்தும் அதற்கு நீதியான விசாரணையை கோரியும் விசேட கண்டனப்பிரேரணை ஒன்று வட மாகாணசபையில் இன்று முன்மொழியப்பட்டபோதும், அவை உறுப்பினர்களின் எதிர்ப்பின் காரணமாக அப்பிரேரனை அடுத்த அமர்விற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வடமாகாணசபையின் 110வது அமர்வு இன்று யாழ் கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கிந்தொட்ட உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீது அண்மையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களை கண்டிக்கும் விசேட பிரேரனை ஒன்றை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவையில் முன்மொழிந்தார்.
இவ்வேளையில் வவுனியாவில் இடம்பெற்ற சம்பவம் திட்மிட்ட ரீதியில் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை எனவும் எனவே அதை தவிர்த்து விட்டு இப்பிரேரனையை நிறைவேற்றுமாறு வவுனியா மாவட்ட உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
இவ்விடயத்தில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் இவ்வாறான பிரேரனைகள் மேலும் வன்முறைகளை தூண்டும் விதமாக அமைந்துவிடும் என்ற ரீதியில் எதிர் கட்சி தலைவர் சி.தவராசா உள்ளிட்ட ஏனைய சில உறுப்பினர்களும் கருத்துக்களை தெரிவித்தனர்.
இவ்விடயத்தில் அவசர முடிவுகள் எடுக்காமல் அடுத்த அமர்விற்கு இதை ஒத்தி வைக்குமாறு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வழங்கிய ஆலோசனைக்கமைவாக இவ்விடயம் அடுத்த அமர்விற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.