தரகர்களால் தரப்படும் வீசா மற்றும் விமான பயணச் சீட்டை பயன்படுத்தி சுற்றுலா உள்ளிட்டவற்றுக்காக வெளிநாடு செல்பவர்கள் அவதானமாக இருக்குமாறு, யாழப்பாண பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யாழில் உள்ள பெரும்பாலானவர்கள் விடுமுறையை கழிக்க மற்றும் புனிதப் பயணங்களுக்காக வெளிநாட்டுக்கு செல்ல பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள வீசா மற்றும் விமான பயண அனுமதிச் சீட்டுக்கள் போலியானவை என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுபோன்று தரகர்களால் ஏமாற்றப்பட்ட பலர், யாழின் பல பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகளை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய, நேற்றையதினம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடு ஒன்றில், குடும்பத்திலுள்ள மூவர் இந்தியாவுக்கு செல்வதற்காக, ஒரு இலட்சத்து இருபத்து எட்டாயிரம் ரூபா தரகருக்கு வழங்கியுள்ளதாக, கூறியுள்ளனர்.
எனினும், குறித்த தரகரால் வழங்கப்பட்ட விமானப் பயணச் சீட்டு, ஹோட்டல் அரை ஒதுக்கப்பட்டமைக்கான சீட்டு மற்றும் வீசா என்பன போலியானது என, முறைப்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், அவர்களால் வழங்கப்பட்ட பற்றுச் சீட்டுக்களும் போலியானவை எனக் கூறியுள்ள பொலிஸார், அதிலுள்ள முகவரியில், அதுபோன்றதொரு நிறுவனம் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, விடுமுறைக்காக வெளிநாடு செல்ல விரும்புபவர்கள், குறைந்த பணத்தை கருத்தில் கொண்டு இதுபோன்ற மோசடிகளில் சிக்க வேண்டாம் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.