சவூதி அரேபிய மன்னரின் இல்லத்தை குறிவைத்து ஏமன் ஹவுத்தி போராளிகள் ஏவிய ஏவுகணை ஈரானில் வடிவமைக்கப்பட்டது என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வரும் ஏமனில், அரசுப்படைகளுக்கு ஆதரவாக சவூதி அரேபியாவும், ஹவுத்தி போராளிக்குழுவுக்கு ஆதரவாக ஈரானும் களமிறங்கி சண்டையிட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் சவூதி அரேபிய மன்னரின் தலைமையகம் மற்றும் அரசவை அமைந்துள்ள அல் யாமாமா அரண்மனையை குறித்து பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் ஏமனிலிருந்து நடத்தப்பட்டது.
ஹவுத்தி போராளிகள் இந்த ஏவுகணையை ஏவியதாகவும், அதனை சவுதி அரேபியா இடைமறித்து அழித்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.
இந்நிலையில், சவூதியை குறிவைத்து வீசப்பட்ட ஏவுகணையில் ஈரானின் சின்னம் இருந்ததாக ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து கூறிய அவர் , ஈரானின் குற்றங்களை அம்பலப்படுத்த தாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவ்வாறு இல்லையெனில் ஒரு மோசமான பிராந்திய மோதலுக்கு ஈரான் வித்திடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் குறித்த குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.