வடக்கு மகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 324 நாளாக தொடந்து வரும் நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் குடும்பங்களின் சங்கத் தலைவியான காசிப்பிள்ளை ஜெயவனிதா தலைமையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்ட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் புகைப்படங்களுடன், சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த தாய்மாரை, தமிழர் தன்னெழுச்சியை துரோகம் மூலம் இலங்கை அரசைப் பாதுகாத்த எட்டப்பர்கள்!,
தமிழர்களுக்கு அமரிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தீர்வைத்தரவிடாமல் தடைபோட்டு இலங்கை அரசைப் பாதுகாக்கும் விலைபோனோர் கூட்டம் என்ற பதாதைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழ் தலைமைகளின் புகைப்படங்களுக்கு மண் அள்ளிப்போட்டு திட்டிய காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனே ஜனாதிபதி சந்திப்பில் இடையில் புகுந்து குழப்பியதுடன் தங்களுக்கு துரோகம் செய்ததாக குற்றஞ்சாட்டினர்.
எதிர்க்கட்சி தலைரை தாங்கள் தெரிவு செய்து ஒரு வருடமாகிறது அத்துடன் அவருடன் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுக்கு எந்த தீர்வும் வழங்க முடியாதவர்கள் ஏன் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என கேள்வி எழுப்பினர்.