சாய்ந்தமருது பிரதேசத்தில் இவ்வருடம் ஜனவரி 01 ஆம் திகதி தொடக்கம் இன்று வரையான மூன்று மாத காலப் பகுதிக்குள் 88 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.அஜ்வத் தெரிவித்தார்.
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நேற்று(29-03-2018) வியாழக்கிழமை உதவி பிரதேச செயலாளர் ஏ.எம். ரிக்காஸ் தலைமையில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதை அவதானிக்க முடிகிறது.
இதனை கட்டுப்படுத்துவதற்காக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வருடத்தில் மாத்திரம் இதுவரை 88 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலை தொடருமாக இருந்தால் மிக மோசமான விளைவினை எதிர்நோக்க நேரிடும்.
இப்பிரதேசத்தில் அதிகரித்துக் காணப்படும் டெங்கு நுளம்புத் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் வீடு, வளைவுகளில் தேங்கி கிடைக்கும் சிரட்டைகள், பிளாஸ்டிக், கொள்கலன்கள் மற்றும் திண்மக் கழிவுகளை அவசரமாக அகற்றும் நடவடிக்கையினை கல்முனை மாநகர சபை மூலம் முன்னெடுப்பதற்கு ஒழுங்கு செய்துள்ளோம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் டெங்கு நுளம்பு பெருக்கம் மற்றும் அதனை கட்டுப்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்வரும் ஏப்ரல் 07,08 ஆம் திகதிகளில் இரு தினங்கள் இப்பிரதேசத்தில் டெங்கு ஒழிப்புக்கான விசேட துப்பரவு செயற்றிட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.