பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடைய செய்வதும், வெற்றியடைய செய்வதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமே உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நுவரெலியா சீத்தாஎலிய பிரதேசத்தில் இன்று உல்லாச விடுதி ஒன்றின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அங்கிருந்து வெளியேறுகையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் மேலும் பதிலளிக்க முற்பட்ட வேளையில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் மஹிந்த ராஜபக்ஷவின் வலது கையை இருக்கிப்பற்றியுள்ளார்.
அதன்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தரும் வகையில் அனைவரும் என் கையை பிடிக்கின்றார்கள்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் ஆதரவாகவே செயற்படுகின்றார்கள். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவரும், நாட்டின் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவிடமே கடைசி தீர்மானம் உள்ளது.
ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணை சம்மந்தமாக பூரண நம்பிக்கையிருக்கின்றது.
பிரேரணையை ஆதரிப்பதோ அல்லது எதிர்ப்பதோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையிலேயே தங்கியுள்ளது.
இவ்வாறு பதிலளிக்கும் போது இடையில் குறிக்கிட்ட ஆறுமுகன் தொண்டமான், முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பார்த்து நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நீங்கள் கையொப்பம் இடவில்லை இது தான் எனக்கும் பிரச்சினையாக இருக்கின்றது என்று சொன்னார்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி தெரிவிக்கையில், எப்போதும் விசுவாசம் என்பது இருந்தது இல்லையே. இப்போது மாத்திரம் கையொப்பமிட என இதன்போது முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதன்போது ஆறுமுகன் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில், மனிதனுக்கு இரண்டு கண்கள் உண்டு. இந்த நிலையில் ஒரு கண் மைத்திரிபால சிறிசேன என்றால் மற்றொரு கண் மஹிந்த ராஜபக்ஷ ஆகும். இவ்வாறே நாம் செயல்படுகின்றோம் என்றார்.