இலங்கையில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் மற்றும் அவதூறு ஏற்படும் வகையில் வெளியீடுகளை மேற்கொள்வோருக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலினை பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
”சமூக ஊடக வலைப்பின்னல் பல்வேறு இணையத்தளங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் ஊடகங்கள், இணையத்தள ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலகமாக உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுதல் விநியோகித்தல் மற்றும் அவதூறுகளை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக தற்பொழுது உள்ள சட்டக்கட்டமைப்பிற்குள் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சரவைக்கு சிபார்சுகளை முன்வைக்குமாறு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சு, தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் அமைச்சு, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ஆகிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது” என்றார்.