மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டதாரிகளை பட்டதாரிப் பயிலுனர்களாக 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கான நேர்முகப்பரீட்சைகள் இன்று 16ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறுகிறது.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் இதற்கான அழைப்புகள் பட்டதாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பத்திரிகை விளம்பரங்களின் ஊடாக கடந்த 06.08.2017 முதல் 08.09.2017 வரையான ககாலப்பகுதியினுள் விண்ணப்பித்த 31.12.2016 வரை பட்டங்களைப் பெற்றுக்கொண்ட 2598 பட்டதாரிகள் இந் நேர்முகப்பரீட்சைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
பட்டதாரிகள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டச் சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ், ஏனைய சான்றிதழ்கள், தேசிய அடையாள அட்டை, வதிவிடத்தினை உறுதிப்படுத்தும் பிரதேச செயலாளரின் அறிக்கை, வேலையற்ற பட்டதாரி என்பதனை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களுடன் நேர்முகப்பரீட்சைக்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மொழித் தேர்ச்சி தொடர்பான சான்றிதழ்கள், கணணி அறிவு தொடர்பான சான்றிதழ்கள், அதே நேரத்தில் இலங்கைக்கு வெளியே அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பெறப்பட்ட பட்டங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுதிப்படுத்தலுடன் இருத்தல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
புள்ளிகளின் அடிப்படையிலேயே இந் நேர்முகப்பரீட்சை நடைபெறுகின்றமையினால் பட்டதாரிகள் சான்றிதழ்கள் ஆவணங்களைச் சரியான முறையில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், வேலையற்ற பட்டதாரிகளை பட்டதாரிப் பயிலுனர்களாக ஆட்சேர்ப்பு செய்வதற்காக நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படாத பட்டதாரிகள் எவ்வித குழப்பமும் அடையத் தேவையில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ம.உதயகுமார் தெரிவித்தார்.
2017.08.06ஆம் திகதி பத்திரிகை விளம்பத்தின் அடிப்படையில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் அவ் விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து மாவட்ட செயலகத்தில் கையளிக்கும் படியும். அவர்களுக்கான நேர்முகப் பரீட்சைக்கான பொருத்தமான திகதி அரசாங்க அதிபர் அல்லது மேலதிக அரசாங்க அதிபரினால் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேர்முகப்பரீட்சையில் கலந்து கொள்ளும் பட்டதாரிகளிடம் மொழித் தேர்ச்சி, கணணி அறிவு, மேலதிக கல்வித் தகமையும் ஏனையவையும், விடயத்துக்குப் புறம்பான செயற்பாடுகள், நேர்முகப் பரீட்சையின் போது காட்டப்படும் திறமைகளும் செயற்பாடுகளும் பரீட்சிக்கப்படும். இவைகளுக்காக தனித்தனியே 20 புள்ளிகள் வழங்கப்பட்டு மொத்தம் 100 புள்ளிகள் கணிக்கப்படும்.
இதில், 31.12. 2016 அல்லது அதற்கு முன்னராக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டத்தினைப் பெற்றவர்களாகவும். 08.09.2017 அன்று 21 வயதுக்குக் குறையாமலும், 35 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் அவசியம்.
அத்துடன், வதிவிடத்தினை உறுதிப்படுத்துவதற்கு கிராம சேவையாளர் ஊடாக பிரதேச செயலாளரது உறுதிப்படுத்தலுடன் அறிக்கையிடுதல் வேண்டும்.
பெயர் மாற்றங்கள் தொடர்பான விடயங்கள் ஏதாவது இருப்பின் அதனை சத்தியக் கடதாசி மூலமாக உறுதிப்படுத்துவது அவசியமானதாகும்.